மலேசிய சாதனை புத்தகத்தில் ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்கள் தடம் பதித்தனர்
ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பாக உருவாக்கிய ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்து சாதனை செய்துள்ளது.
ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு இங்குள்ள பெட்டாலிங் ஜெயா, லைப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரையில் மிக பிரம்மாண்டமாக வெளியீடு கண்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகர்களாக பின்னணி பாடகி டத்தின்ஸ்ரீ சைலா நாயர், கலைஞர்களின் காப்பாளர் டத்தோ தீபாகரன், காப்பார் சட்டமன்ற உறுப்பினர் மணிவண்ணன் கோவின், டத்தோ வேணுகோபால், டத்தோஸ்ரீ டாக்டர் தினகரன் நாயர், டத்தின்ஸ்ரீ பரமேஸ்வரி, டத்தின் ஜெயந்தி, உமா இராமசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகரில் முதல் பிரிவில் 22 மாணவர்களுடன் தோற்றுவிக்கப்பட்ட ஒடிசி இசை பயிலரங்கு இன்று 9ஆவது பிரிவில் 66 மாணவர்களைக் கொண்டு கர்னாடக இசை, மெல்லிசை (Light Music) ஆகிய இரு வகையான இசைகளுக்கு முக்கியத்துவமளித்து சிறப்பான முறையில் இசை வகுப்புகளை வழி நடத்தி வருகிறது.
ஒவ்வோர் இசைக் கலைஞனுக்கும் தேவையான இசை திறன்களையும் நுணுக்கங்களையும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாணவரின் ஆர்வமும் பங்களிப்பும் அவர்களின் இசை பயிற்சிக்கு உறுதுணையாக உள்ளன. நாங்கள் ஒடிசியில் சுய பயிற்சி முறையை உருவாக்கி அதனை முறையாக மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து தக்க பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அதுதான் இன்று இந்த வெற்றிக்கு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று ஒடிசி இசை பயிலரங்கின் தலைமை பயிற்றுநரும் நாட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஜெய் குறிப்பிட்டார்.
மாணவர்களைப் பாடுவதற்கு மட்டும் பயிற்சிகள் வழங்காமல் அவர்களை இசைத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கு பாடல் எழுதும் பயிற்சிகள், இசைக் கருவிகள் பயன்படுத்தும் நுணுக்கங்களையும் போதித்து அவர்களைத் தயார் நிலைப்படுத்தியுள்ளனர்.
No Comment